Published : 03 Dec 2019 03:08 PM
Last Updated : 03 Dec 2019 03:08 PM

ஏமனில் 80% மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை

ஏமனின் ஐந்தாண்டு போர் படிப்படியாக முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில், அந்நாட்டில் வசிக்கும் மக்களில் 80% பேர் உணவுப் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளனர் என்று சமீபத்தில் வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சர்வதேச மீட்புக் குழு கூறும்போது, “ ஏமனில் தற்போது உள்ள மக்கள் தொகையில் 80% பேர் உணவுப் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் உள்ள குழந்தைகளுக்குக் கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பதே அர்த்தமாகிறது.

ஏமனில் குழந்தைகள் ஊட்டச்சத்து உணவு கிடைப்பதற்கான நிலையை அடைய சுமார் 20 ஆண்டுகள் தேவைப்படும். ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது நீங்கள் விரைவாக மீட்கக் கூடிய ஒன்றல்ல” என்று தெரிவித்துள்ளது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர்.

ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சவுதி, ஏமன் போரை படிப்படியாக முடிவுக்கு கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறது. இதன் காரணமாக அங்கு தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x