Published : 29 Nov 2019 06:25 PM
Last Updated : 29 Nov 2019 06:25 PM

அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை: உறுதிப்படுத்திய தலிபான்கள்

அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருவதை தலிபான்கள் தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு நன்றி நவிலலுக்காக திடீர் வருகை மேற்கொண்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். தாலிபான்களுடன் அமெரிக்கா அமைதிப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தையே தாலிபான்கள் விரும்புவதாக ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்கவுடனான அமைதி பேச்சுவார்த்தையை தலிபான்கள் தரப்பும் உறுப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக முதற்கட்ட சந்திப்புகள் தோஹாவில் நடைபெற இருப்பதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் கைதிகள் இடமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் தலிபான்களால் 2016 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட இரண்டு அமெரிக்கப் பேராசிரியர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி ஆகியோரைத் தொடர்புகொண்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்தார்.

மேலும், ஆப்கன் ராணுவ வீரர்கள் பத்து பேரையும் தலிபான்கள் விடுதலை செய்தனர். இதற்குப் பதிலாக 3 தீவிரவாதிகளை ஆப்கான் அரசு விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து தலிபான்களுடன் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு தயாராகி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x