Published : 29 Nov 2019 08:37 AM
Last Updated : 29 Nov 2019 08:37 AM

ஆப்கானிஸ்தானுக்கு திடீர் ரகசிய வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்: தாலிபான்கள் போர் நிறுத்தம் விரும்புவதாக நம்பிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு நன்றி நவிலலுக்காக திடீர் வருகை மேற்கொண்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். தாலிபான்களுடன் அமெரிக்கா அமைதிப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தையே தாலிபான்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

வியாழக்கிழமை உள்ளூர் நேரம் இரவு 8.30 மணியளவில் பாக்ரம் ஏர்ஃபீல்டில் ட்ரம்ப் விமானம் வந்திறங்கியது. சுமார் இரண்டரை மணி நேரங்கள் அங்கு அவர் செலவிட்டு படையினருக்கு நன்றி தெரிவித்ததோடு ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஆப்கானில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் அவரது இந்தப் பயணம் கடைசி வரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, பத்திரிகையாளர்களுக்கும் இந்த வருகையை முன் கூட்டியே வெளியிட வேண்டாம் என்பது அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆப்கனில் சுமார் 12,000 அமெரிக்கப் படைகள் பணியாற்றி வருகின்றன.

“நாங்கள் தாலிபான்களை சந்திக்கிறோம். போர் நிறுத்தத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். முதலில் போர் நிறுத்தம் விரும்பாத தாலிபான்கள் இப்போது போர் நிறுத்தம் விரும்புகின்றனர். நான் அப்படித்தான் நம்புகிறேன், என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் அனைவரும் பார்ப்போம்” என்றார் ட்ரம்ப்.

2016-ம் ஆண்டு தன் தேர்தல் பிரச்சாரத்தில் “அமெரிக்காவின் முடிவற்ற போர்களை’ நிறுத்துவோம் என்றார் ட்ரம்ப். ஆப்கானிலிருந்தும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் அமெரிக்க படைகளை வாபஸ் பெற ட்ரம்ப் விரும்பினார், ஆனால் இதற்கு முன்னிலை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக் கொள்ளவில்லை.

மற்ற நாடுகளின் பிரச்சினைகள் அந்தந்த நாடுகள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் ஒன்று. ஏனெனில் 18 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்ட இந்த ஆப்கான் படையெடுப்பினால் ஆயிரக்கணக்கான ஆப்கான் குடிமக்களும், 2,400 அமெரிக்கப் படையினரும் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x