Published : 28 Nov 2019 12:50 PM
Last Updated : 28 Nov 2019 12:50 PM
சீன எதிர்ப்பை மீறி, ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கல் செய்த மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
சீன நாட்டுக்குச் சொந்தமான ஹாங்காங் தீவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாவட்ட கவுன்சில் தேர்தலில், ஜனநாயக ஆதரவாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். இந்தத் தேர்தலில் சீன அரசுக்கு ஆதரவான வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர்.
கடந்த ஆறு மாதங்களாக நடைபெறும் போராட்டத்தின் விளைவுதான் இந்த முடிவு என்றும், இந்தத் தீர்ப்பை ஏற்பதாகவும், மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை இதன் அடிப்படையில் பரிசீலிப்பதாகவும் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லேம் அறிவித்தார்.
இந்நிலையில் ஹாங்காங் விவகாரத்தில் எந்த நாடும் தலையிட வேண்டாம் என்று சீனா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது. இதனிடையே அமெரிக்கா, ஹாங்காங் விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான மசோதா ஒன்றில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த மசோதவில் ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய அந்நாட்டு போலீஸாருக்கு கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள், பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மசோதாவில் கையெழுத்திட்டது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “ சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனா மற்றும் ஹாங்காங் மக்கள் மீதுள்ள மரியாதை அடிப்படையில் நான் இந்த மசோதாவில் கையெழுத்திட்டுள்ளேன். ஹாங்காங்கில் நீண்டகால அமைதி ஏற்பட ஹாங்காங் அற்றும் சீனப் பிரதிநிதிகள் வேறுபாடுகளை இணக்கமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டி இந்த மசோதா இயற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் மசோதாவை ஹாங்காங் அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. இது தவறான குறியீடு என்றும் இதனால் பதற்றம் தணியாது என்றும் ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், ட்ரம்ப்பின் முடிவை ஹாங்காங் போராட்டக்காரர்கள் வரவேற்றுள்ளனர். ஹாங்காங் போராட்டத்தில் முக்கியச் செயற்பாட்டாளராக உள்ள ஜோஷ்வா வாங், இது ஹாங்காங் மக்களின் சாதனை என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT