Published : 26 Nov 2019 06:47 PM
Last Updated : 26 Nov 2019 06:47 PM

அல்பேனியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

அல்பேனியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “அல்பேனியா தலைநகர் திரானாவிலிருந்து சுமார் 18 மைல்கள் தூரம் உள்ள ஷிஜக் நகரில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் அல்பேனியாவில் கணிசமான அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக 140 பேர் காயமடைந்த நிலையில் 9 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்” என்று செய்தி வெளியானது.

நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் வீடுகள் மற்றும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட 48 வயதான ஜோகோ கூறும்போதும், “நாங்கள் எங்கள் குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதிலிருந்து நாங்கள் எவ்வாறு மீண்டோம் என்று தெரியவில்லை. கடவுள்தன் உதவினார்” என்றார்.

அல்பேனியாவைத் தொடர்ந்து போஸ்னியா நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x