Published : 25 Nov 2019 04:33 PM
Last Updated : 25 Nov 2019 04:33 PM

பாகிஸ்தானில் அடுத்த மூன்று மாதங்களில் மறு தேர்தல்: மவுலானா

பாகிஸ்தானில் அடுத்த மூன்று மாதத்தில் மறு தேர்தல் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மவுலானா ஃபஸ்லர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாஸ்ல் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மவுலானா ஃபஸ்லர் கூறும்போது, ''பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்துகிறோம். மறு தேர்தல் மூன்று மாதங்களில் நடைபெறும். நாட்டின் அரசியல் சூழல் வெகு விரைவில் மாறக்கூடும்” என்றார்.

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இம்ரான் கான் அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாகவே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக 'ஆசாதி மார்ச்' போராட்டத்தை எதிர்க்கட்சிகள் நடத்தின.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எதிர்க் கட்சிகளின் ராஜினாமா கோரிக்கையைத் தவிர பிற கோரிக்கைகளை ஏற்பதாக இம்ரான் கான் தெரிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x