Published : 23 Nov 2019 06:42 PM
Last Updated : 23 Nov 2019 06:42 PM

 ஈரான் குறித்து ஐக்கிய அமீரகத்துடன் ஆலோசனை நடத்திய மைக் பாம்பியோ

ஈரானின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஐக்கிய அமீரகத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ஐக்கிய அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா பின் சயத்துடன் ஈரானின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு குறித்து மைக் பாம்பியோ தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரானின் நடவடிக்கைகள் பிராந்தியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி இருப்பது குறித்து ஐக்கிய அமீரக வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினேன். மேலும் லிபியா, ரஷ்யா குறித்து ஆலோசனை நடத்தினோம்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் யுரேனியம் செறிவூட்டலுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படுத்தமாட்டோம் என்றும் ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஈரான் அணு ஆயுத சோதனை ஒப்பந்தங்களை அவ்வப்போது மீறி வருகிறது. இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x