இடைக்கால அமைச்சரவையை நியமித்தார் கோத்தபய ராஜபக்ச: முக்கியப் பதவிகளில் சகோதரர்கள்

இடைக்கால அமைச்சரவையை நியமித்தார் கோத்தபய ராஜபக்ச: முக்கியப் பதவிகளில் சகோதரர்கள்
Updated on
1 min read

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இடைக்கால அமைச்சரவையை நியமித்துள்ளார். அவரின் சகோதரர்கள் அமைச்சரவையின் முக்கியப் பொறுப்புகளில் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பிடிஐ வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், “இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று (வெள்ளிக்கிழமை) அவரது இரு சகோதரர்களை உள்ளடக்கிய 16 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமித்தார்.

கோத்தபய ராஜபக்சவின் சகோதரர் மகிந்த ராஜபக்சவுக்கு நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தை அளித்திருக்கிறார். மேலும் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சவுக்கு உணவு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் குணவர்தன் வெளியுறவுத் தொடர்புகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில அமைச்சர்கள் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார்கள் என்று கோத்தபய ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்தது. சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. முடிவு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதிபர் தேர்தலில் 54 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.

சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை வெற்றி கொண்டார் கோத்தபய ராஜபக்ச.

மேலும் இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in