Published : 21 Nov 2019 04:13 PM
Last Updated : 21 Nov 2019 04:13 PM

18 ஜிகாதிகள் சுட்டுக்கொலை: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

நேற்றிரவு நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புர்கினோ பாசோவில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாகதூகு

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சண்டையில் 18 ஜிகாதி தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

புர்கினோ பாசோவின் அண்டை நாடான சாஹேலில், ராணுவம் மேற்கொண்ட இரண்டு நடவடிக்கைகளில் கடந்த வாரம் 32 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதையடுத்து இச்சம்பவம் நடந்துள்ளது.

புர்கினா பாசோவின் அண்டை நாடுகளாக இருப்பவை மாலி மற்றும் நைஜர் உள்ளிட்ட சாஹேல் பகுதி ஆகிய நாடுகள். இங்கு ஏற்கெனவே பிராந்திய ஜி 5 சாஹேல் படை மற்றும் அமெரிக்கா மற்றும் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்சின் துருப்புகள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் இப்பகுதிகள் அனைத்தும் தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்டு வருகிறது.

18 ஜிகாதிகள் கொல்லப்பட்டது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''புர்கினோ பாசோவின் சூம் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நேற்றிரவு 18 ஜிகாதி தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டையின்போது போலீஸார் தகுந்த பதிலடி கொடுத்ததால் தாக்குதல் நடத்த வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

இதில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார் மற்றும் ஏழு அதிகாரிகள் காயமடைந்தனர். ஜிகாதிகளுக்குச் சொந்தமான ஆயுதங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஜி.பி.எஸ் உபகரணங்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x