Published : 21 Nov 2019 02:13 PM
Last Updated : 21 Nov 2019 02:13 PM

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் மூத்த சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச இலங்கை பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை அதிபர் தேர்தல் சனிக்கிழமை நடந்தது. சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. முடிவு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதிபர் தேர்தலில் 54 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை வெற்றி கொண்டார் கோத்தபய ராஜபக்ச.

இதனால் தோல்விக்குப் பொறுப்பேற்று ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பிரதமராக இருந்து வரும் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு, மகிந்த ராஜபக்ச அக்டோபர் 26-ம் தேதி பிரதமராகப் பதவி ஏற்றார். அப்போது அதிபராக இருந்த மைத்திரிபால சிறிசேனா, பிரதமராக இருந்த விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்து பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் டிசம்பர் மாதம் அளித்த தீர்ப்பில், அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தது சட்டவிரோதம் என தீர்ப்பு வழங்கியது. இதனால் ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ச இலங்கை பிரதமராகப் பதவியேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x