Published : 20 Nov 2019 01:21 PM
Last Updated : 20 Nov 2019 01:21 PM

விரைவில் இணைய சேவை மீட்டெடுக்கப்படும்: ஈரான்

நாட்டின் நிலைமை சீரான பிறகு இணையம் மீட்டெடுக்கப்படும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் அலி ரபீ கூறும்போது, “ஈரானில் பல மாகாணங்களில் நிலைமை சீராகத் தொடங்கியுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். நாட்டின் நிலைமை முழுமையான சீரான பிறகு இணையதள சேவை மீட்டெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை 50 சதவீதம் கடந்த வாரம் உயர்த்தப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஈரான் அரசின் இந்த முடிவை ஈரான் மதத் தலைவர் அயத்தெல்லா காமெனி ஆதரவு தெரிவித்தார்.

எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து ஈரான் மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் இறங்கினர். இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வன்முறை நீடிக்கிறது. இதுவரை இப்போராட்டத்தில் 38 பேர் பலியாகினர்.

இந்நிலையில் ஈரானில் நிலவும் போராட்டத்தால் நாட்டில் பாதுகாப்பின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி எச்சரித்தார்.

மேலும் நாட்டில் வன்முறைப் பரவலைத் தடுக்க சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x