Published : 19 Nov 2019 04:51 PM
Last Updated : 19 Nov 2019 04:51 PM
தைவான் தேர்தலில் சீனா ஒவ்வொரு நாளும் தலையிடுகிறது என்று அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று தைவானின் பிரச்சினைமிக்க நீரிணைப்புப் பகுதி வழியாக சீனாவின் விமானங்கள் பயணித்தன. இதனைத் தொடர்ந்து தைவான் அதிபர் சீனாவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தைவான் அதிபர் சாய் இங்-வென் கூறும்போது, “தைவான் ஒரு சுதந்திரமான நாடு. எங்கள் மக்களுக்கு அவர்களது அதிபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முழு உரிமையும் உள்ளது. எங்களுக்கு இறையாண்மை உள்ளது. எங்களுக்கென்று ஒரு அரசாங்கம் உள்ளது. எங்களுக்கு ஒரு ஜனநாயக சுதந்திர அமைப்பு உள்ளது. நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொள்வோம். எங்களுக்கும் ராஜதந்திர உறவுகள் உள்ளன. தைவான் தேர்தலில் சீனா தலையிடுவது மிக எளிதாக எங்கள் கண்களுக்குத் தெரிகிறது. பெரிய பரப்பளவைக் கொண்ட நாடு என்ற முறையில் பிராந்தியத்தில் அமைதியைக் காப்பதற்கான பொறுப்பு சீனாவுக்கு உள்ளது” என்றார்.
தைவானில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. சீனா, இந்த அழுத்தத்தை தைவான் அதிபர் சாய் இங்-வென்னுக்கு கொடுத்து வருகிறது.
மேலும், தென் சீனக்கடல் பகுதியையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT