Published : 18 Nov 2019 02:40 PM
Last Updated : 18 Nov 2019 02:40 PM

போராட்டக்காரர்களுக்கு ஈரான் அதிபர் எச்சரிக்கை

ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தால், பாதுகாப்பின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சுமார் 80,000க்கும் அதிகமானவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வன்முறை நீடிக்கிறது. இதில் தியாகிகள் சதுக்கத்தில் நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.

இந்நிலையில் ஈரானில் நிலவும் போராட்டத்தால் நாட்டில் பாதுகாப்பின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து ரவ்ஹானி கூறும்போது, “மக்களுக்குப் போராட்டம் நடத்த உரிமை உண்டு. ஆனால் இது வன்முறை. நாங்கள் வன்முறையினால் நாட்டில் பாதுகாப்பின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது” என்றார்.

வன்முறை காரணமாக ஈரானில் சமூக வலைதளப் பயன்பாடும் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக விலை அதிகரிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது அவ்வப்போது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதன் காரணமாக ஈரான் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x