Published : 18 Nov 2019 12:12 PM
Last Updated : 18 Nov 2019 12:12 PM
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் சுமார் 49,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து டான் வெளியிட்ட செய்தியில், “பாகிஸ்தானில் இவ்வாண்டு டெங்கு பாதிப்பு தீவிர நிலையை அடைந்துள்ளது. இதற்கு முன்னர் இல்லாத வகையில் பாகிஸ்தானில் சுமார் 49,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்தது. டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ள 49,587 பேரில் 13,173 பேர் இஸ்லமாபாத்தை சேர்ந்தவர்கள், 13,251 பேர் சிந்து பகுதியை சேர்ந்தவர்கள், 9,855 பேர் பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சுமார் 625 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெங்குவை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இறங்கியிருக்கிறார். பாகிஸ்தானில் கடந்த 2011 ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. சுமார் 27,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகப்படியான டெங்கு காய்ச்சல் பரவலை பாகிஸ்தான் தற்போது எதிர் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. பிலிப்பைன்ஸில் சுமார் 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,407 பேர் பலியாகி உள்ளனர். பிலிப்பைன்ஸை தொடர்ந்து இலங்கையிலும் சுமார் 2 லசத்துக்கு அதிகமானவர்கள் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT