

இலங்கையின் 8-வது அதிபராக கோத்தபாய ராஜபக்ச பதவி ஏற்க உள்ளார்.
அதிபரைத் தேர்வு செய்ய நடந்த தேர்தலில் 54 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவரின் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இன்று மாலை 4 மணிக்கு மேல்தான் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
அதேசமயம், கோத்தபாய ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். பிரேமதாசா 43 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் பிரேமதாசா ராஜினாமா செய்துள்ளார்.
நாடுமுழுவதும் ஒருகோடியை 20லட்சம் பேர் வாக்களித்த நிலையில் அதில் 60லட்சம் வாக்குகளை கோத்தபாய ராஜபக்ச பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையில் புதிய அதிபரைத் தேர்வு செய்யும் பொதுத்தேர்தல் நேற்று நடந்தது. 12 ஆயிரத்து 875 வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் ஒரு கோடியை 20 லட்சம் மக்கள் வாக்களித்தனர்.இலங்கை தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் கோத்தபய ராஜபக்ச, ஆளும் ஜனநாயக தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா ஆகியோர் இடையேதான் கடும் போட்டி இருந்தது.
தேர்தல் முடிந்து முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் இருந்தே கோத்தபய ராஜபக்சதான் முன்னிலை வகித்து வந்தார். தபால் வாக்குகள்தான் கோத்தபயவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் சிங்களர்கள் வசிக்கும் தெற்கு மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பெரும்பகுதியான வாக்குகள் கோத்தபயவுக்கு கிடைத்தன.
ஆனால், சஜித் பிரேமதாசாவுக்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு, வடக்கு மாவட்டங்களில் இருந்து 90 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்தப் பகுதியில் கோத்தபயவுக்கு வெறும் 5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரை முன்நின்று நடத்தியவர் கோத்தபய ராஜபக்ச என்பதால், அவருக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது.
இலங்கையில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் வெளியிட்ட செய்தியில் மொத்தமுள்ள 17 மாவட்டங்களில் கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இருக்கிறார். கண்டி, ரத்னபுரா, அனுராதபுரம், பொலனுருவா, நுவாராலியா, கம்பகா, ஹம்பனோட்டா, கல்லே, படுலா, காகலே, மாத்தரை, குருனேகலே,புத்தலம், கலுதரா, கொழும்பு, மாத்தலே, மொனரகலா ஆகிய மாவட்டங்களில் கோத்தபய முன்னிலையுடன் இருந்து வருகிறார்.
அதேசமயம், திரிகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, திகமதுலா ஆகிய 5 மாவட்டங்களில் பிரேமதேசா முன்னிலை பெற்றுள்ளார்.
தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள பிரேமதசா வெளியிட்ட அறிக்கையில் " தீவிரமான தேர்தல் பிரச்சாரம், கடினமான போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மக்கள் அளித்த முடிவை, தீரப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்.வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு எனது வாழ்த்துக்கள். மிகவும் அமைதியாகத் தேர்தல் நடந்து முடிந்தது.கடந்த 5 ஆண்டுகளாக ஜனநாயக ரீதியான பலன்களும், பல்வேறு சீர்திருத்தங்களும் செய்யப்பட்டன.
பு
திய அதிபருக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், ஜனநாயக அமைப்புகளை பாதுகாத்து, வலிமைப்படுத்தி, அதன் மாண்புகளைக் காப்பாற்றுங்கள். தேர்தலுக்குப்பின் நாட்டில் அமைதி நிலவட்டும்" எனத் தெரிவித்தார்
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரி்ல் கூறுகையில், " அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபயவுக்கு எனது வாழ்த்துக்கள். நம்முடைய பிராந்தியத்தின் பாதுகாப்பு, வளர்ச்சி, அமைதி ஆகியவற்றுக்காகவும், இரு நாட்டு மக்களின் சகோதரத்துவ உறவை ஆழமாக எடுத்துச்செல்ல உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்