Published : 16 Nov 2019 02:15 PM
Last Updated : 16 Nov 2019 02:15 PM
கலிபோர்னியாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் உள்ளது சாகஸ் உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் 16 வயதான மாணவர் ஒருவர் தனது பிறந்த நாளன்று சக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 மாணவர்கள் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவர் தன்னைத் தானே தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் உயிரிழப்பு குறித்து போலீஸார் தரப்பில், “துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவர் நதானியேல். அவர் மாணவர்களுடன் இயல்பாகவே பழகினார். அவர் தனிமை விரும்பி இல்லை. அவர் பள்ளியின் விளையாட்டுப் போட்டிகளில் எல்லாம் பங்கேற்றார். அவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் இறக்க, மாணவர் தனது தாயுடன் வசித்து வந்தார். இறக்கும்போது மாணவரது தாயார் உடனிருந்தார்” என்று தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு குறித்து தொடர்ந்து ஆழமான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT