Published : 15 Nov 2019 01:06 PM
Last Updated : 15 Nov 2019 01:06 PM

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

இலங்கையில் நாளை (நவம்பர் 16-ம் தேதி) அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் அதிபர் வேட்பாளராக அநுர குமார திசநாயக்கவும், இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேராவும், தேசிய மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், இந்திய வம்சாவளியைச் சார்ந்த சுப்ரமணியம் குணரத்னம் உட்பட மொத்தம் 35 பேர் களத்தில் உள்ளனர்.

தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும் முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்க ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் முன்னணி, புதிய தொழிலாளர் முன்னணி, ஸ்ரீலங்கா தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தேசிய திட்டம், நவ சம சமாஜ கட்சி, ஸ்ரீலங்கா ஜனநாயக முன்னணி, ஐக்கிய மக்கள் முன்னணி உள்ளிட்ட 12 கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஈஸ்டர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு நடைபெறும் அதிபர் தேர்தல் என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இலங்கை அரசை அந்நாட்டு மக்கள், அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x