Published : 14 Nov 2019 06:35 PM
Last Updated : 14 Nov 2019 06:35 PM
ஐஎஸ் இயக்கம் சிரியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துள்ளது. இது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட நிலையில் ஐஎஸ் அமைப்பால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜாவத் கூறும்போது, “ ஐஎஸ் அமைப்பு சிரியாவிலிருந்தும் இராக்கிலிருந்தும் நகர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துள்ளது. நிச்சயம் இது இந்தியாவுக்கான அச்சுறுத்தலாக அமையும். மேலும் ஒரு நாட்டுக்கான ஆபத்து இல்லை. அந்தப் பிராந்தியத்துக்கான ஆபத்து” என்றார்.
உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த நாச வேலைகளுக்குக் காரணமாக இருந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கப் படைகளால் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார். அவரின் வயது 48.
சிரியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் அல் பாக்தாதி பதுங்கியிருப்பதாக அமெரிக்கப் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் மறைந்திருந்த கட்டிடத்துக்குள் அதிரடியாகப் புகுந்த அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
அமெரிக்கப் படையினருடன் கொண்டு செல்லப்பட்ட நாய்களால் துரத்தப்பட்ட அல் பாக்தாதி, ஒரு குகை போன்ற சுரங்கத்துக்குள் புகுந்தார். அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில், தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து மரணம் அடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT