Published : 14 Nov 2019 04:11 PM
Last Updated : 14 Nov 2019 04:11 PM

இஸ்லாமிக் ஜிகாத் - இஸ்ரேல் இடையே 2 நாள் போர் நிறுத்தம்

காசா பகுதியில் இஸ்லாமிக் ஜிகாத் மற்றும் இஸ்ரேல் இடையே எகிப்தின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அல்ஜசிரா வெளியிட்ட செய்தியில், “ இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லைப் புறத்தில் காசா பகுதியில் இரண்டு நாட்களாக இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேல் படைகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதில் பாலஸ்தீன தீவிரவாதக் குழுவின் முக்கியத் தளபதியான பஹா அபு அல் அட்டா கொல்லப்பட்டார்.

மேலும், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 34 பாலஸ்தீனர்கள் பலியாகினர்.

தொடர்ந்து காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது எகிப்து முயற்சியால் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இரண்டு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல்

முன்னதாக, 1967 -ம் ஆண்டு நடந்த போரில் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரைப் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம்- இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது.

காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து பல மாதங்களாகப் போராடினர். இதில் ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x