Published : 14 Nov 2019 12:18 PM
Last Updated : 14 Nov 2019 12:18 PM

பிரிக்ஸ் மாநாடு: ரஷ்ய அதிபரைச் சந்தித்தார் மோடி

பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்தார்.

இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் நடைபெறும் 11-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க புதன்கிழமை பிரேசில் தலைநகர் பிரேசிலியா வந்தடைந்தார். இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்தார் மோடி.

ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்தது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் , “ரஷ்ய அதிபர் புதினுடன் அற்புதமான சந்திப்பு நடந்தது. எங்களது சந்திப்பில் நாங்கள் இந்தியா - ரஷ்யாவுடனான உறவு குறித்து முழு மதிப்பீடு நடத்தினோம்.

வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் போன்ற பகுதிகளில் இந்தியாவும் ரஷ்யாவும் பரவலாக ஒத்துழைத்து வருகின்றன. ரஷ்யா - இந்தியா இடையே நெருக்கமான இருதரப்பு உறவுகளால் இரு நாடுகளின் மக்கள் பயனடைவார்கள்.

நமது இருதரப்பு உறவு வளர்ந்து வருகிறது. மே மாதம் 9 ஆம் தேதி ரஷ்யாவின் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுத்துள்ளார் புதின். நான் புதினைச் சந்திப்பதற்கான மற்றொரு வாய்ப்புக்காக மகிழ்ச்சியாக காத்துக் கொண்டிருப்பேன்” என்றார்.

மோடியுடனான சந்திப்பு குறித்து ரஷ்ய அதிபர் புதின் கூறும்போது, “இது இந்த ஆண்டின் எங்கள் இருவருக்கும் இடையே நடந்த நான்காவது சந்திப்பு. இந்தியா இடையே கலாச்சாரப் பரிமாற்றங்கள் விரிவடைந்து வருகின்றன” என்றார்.

தொடர்ந்து பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட பிற நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார் மோடி.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்பது இது ஆறாவது முறையாகும். அவர் முதல் முறையாக பிரேசிலில் 2014ல் ஃபோர்டாலெஸாவில் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x