

இராக்கில் முன்கூட்டியே தேர்தல் நடத்தவும், போராட்டக்காரர்கள் மீதான வன்முறையை நிறுத்தவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், “இராக்கில் போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தி, இராக் அதிபர் பர்ஹம் சலிஹ் அளித்த வாக்குறுதிப்படி தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு அழைப்பு விடுக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்தி பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
ஒரு மாதத்திற்கும் மேலாக இராக்கில் நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 319 பேர் பலியாகியுள்ளனர். 15,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து இராக் பிரதமர் அப்துல் மஹ்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, இராக்கில் நடைபெறும் அரசுக்கு எதிரான போராட்டத்தை அமெரிக்கா தூண்டுகிறது என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.