

சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி மற்றும் சிரிய படைகள் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சிரிய அரசு ஊடகம், “ சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரஸ் அல் அய் நகருக்கு அருகே உள்ள உம் ஷைபா கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) துருக்கி மற்றும் சிரிய படைகள் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இரு தரப்பும் துப்பாக்கிகளைக் கொண்டு சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பொதுமக்களும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு சிரியாவில் தொடர்ந்து நடக்கும் வன்முறைகள் கவலை அளிப்பதாக ஐ.நா. சபை தெரிவித்த நிலையில் மீண்டும் இரு நாட்டுப் படைகளும் மோதலில் ஈடுபட்டுள்ளன.
சிரியாவில் கடந்த சில வாரங்களாக நடக்கும் வன்முறை காரணமாக 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
முன்னதாக, சிரியாவில் குர்து படைகளுக்கு எதிராக துருக்கி ராணுவத்தின் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்து திரும்பப் பெற்றது. துருக்கியின் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து குர்து படையினர் பின்வாங்கி உள்ளனர்.
இந்நிலையில் துருக்கி - சிரியா எல்லையில் இரு நாட்டுப் படைகளும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.