Published : 08 Nov 2019 05:02 PM
Last Updated : 08 Nov 2019 05:02 PM
இராக்கில் பாதுகாப்புப் படையினர் அமைதி காக்க வேண்டும் என்று அந்நாட்டின் உயர் பதவியில் உள்ள மூத்த ஷியா மதகுரு வலியுறுத்தியுள்ளார்.
இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக 3 வாரங்களுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
அக்டோபர் மாதம் தொடங்கிய இப்போராட்டத்தில் தற்போது வரை 250 பேர் பலியாகியுள்ளனர். 2,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து இராக்கில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மேலும், இராக் தலைநகர் பாக்தாத்தில் போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது. ஆயுதம் இல்லாமல் போராடும் போராட்டக்காரர்கள் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இராக்கில் பாதுகாப்புப் படையினர் அமைதி காக்க வேண்டும் என்று அந்நாட்டின் மூத்த ஷியா மதகுரு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஷியா மதகுரு அயத்துல்லா அலி அல் சிஸ்தானி கூறும்போது, “அமைதி காக்க வேண்டியது பாதுகாப்புப் படையினரின் கடமை. அமைதியாகப் போராடுபவர்கள் மீது ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இராக்கில் போராட்டக்காரர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT