Published : 07 Nov 2019 05:26 PM
Last Updated : 07 Nov 2019 05:26 PM

ஜப்பான் பிரதமரை முட்டாள் என விமர்சித்த வடகொரியா

ஜப்பான் பிரதமர் சின்சே அபேவை ’முட்டாள்’ என்று வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது.

கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தியது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகளை நவம்பர் 4 ஆம் தேதி நடந்த ஆசியான் ஜப்பான் உச்சி மாநாட்டில் கடுமையாக விமர்சித்தார் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே . மேலும் வடகொரியா ஐக்கிய நாடுகள் சபையின் தடையை மீறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது.

ஜப்பானின் பிரதமர் ஷின்சே அபேவின் விமர்சனம் குறித்து வடகொரியா , “அபே ஒரு முட்டாள். ஜப்பானில் அணுகுண்டு வீசியது போல நடந்து கொள்கிறார் ” என்று விமர்சித்துள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை சோதனை

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

டகொரிய அதிபர் கிம் ஜோங் உன்

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுத சோதனை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வரும் நிலையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x