

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக ஏமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஏமன் அதிகாரிகள் தரப்பில், “ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் அல் மக்ஹா நகரில் தொடர்ந்து நடத்தப்பட்ட நான்கு ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் பொதுமக்களும் அடக்கம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் பொதுமக்கள் பகுதிகள் மோசமாக பாதிப்படைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஏமன் அரசுக்கும் அந்நாட்டின் தென் பகுதியில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும் இடையே சவுதி தலைமையில் அமைதிக்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தத் தாக்குதலை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி உள்ளனர்.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்தது.
ஏமனில் நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.