Published : 03 Nov 2019 02:43 PM
Last Updated : 03 Nov 2019 02:43 PM
புதுடெல்லி
கர்தார்பூர் குருத்வாரா தயாராக இருப்பதாகவும், சீக்கிய யாத்ரீகர்கள் பங்கேற்க வருமாறும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள பகுதி கர்தார்பூர். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தமது இறுதி காலத்தை இங்கு கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டது.
இந்த குருத்வாராவுக்கு செல்வது என்பது சீக்கியர்களின் வாழ்நாள் கடமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனினும், பாகிஸ்தானுக்கு விசா வாங்கி செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு நடந்துள்ளன.
கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரும் 9-ம் தேதி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
கர்தார்பூர் வழித்தட நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் சீக்கிய பக்தர்களுக்கு முதல் நாள் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், கர்தார்பூர் குருத்வாரா தயாராக இருப்பதாகவும், சீக்கிய யாத்ரீகர்கள் பங்கேற்க வருமாறும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் குருநானக்கில் 550 பிறந்த தினத்திற்காக முன்கூட்டியே பாகிஸ்தான் பணிகளை முடித்துள்ளதாக பெருமையும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT