இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆதரவு

சஜித் பிரேமதாசா (இடது), சந்திரிகா குமாரதுங்க (வலது)
சஜித் பிரேமதாசா (இடது), சந்திரிகா குமாரதுங்க (வலது)
Updated on
1 min read

ராமேசுவரம்

இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிபர் தேர்தல் நவம்பர் 16 அன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் அதிபர் வேட்பாளராக அநுர குமார திசநாயக்கவும், இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேராவும், தேசிய மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், இந்திய வம்சாவளியைச் சார்ந்த சுப்ரமணியம் குணரத்னம் உள்ளிட்ட 35 பேர் போட்டியிடுகின்றனர்.

கட்சிகளின் நிலைப்பாடு

தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் முன்னணி, புதிய தொழிலாளர் முன்னணி, ஸ்ரீலங்கா தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தேசிய திட்டம், நவ சமசமாஜ கட்சி, ஸ்ரீலங்கா ஜனநாயக முன்னணி, ஐக்கிய மக்கள் முன்னணி, பலமு பெரமுன, மக்கள் தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட 12 கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக உள்ளன.

வெள்ளிக்கிழமை அதிபர் தேர்தலின் தபால் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை இன்னும் அறிவிக்கவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசிய கட்சியும் கோரியுள்ளன.

இலங்கையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கும், கோரிக்கைகள் குறித்தும் தற்போது எழுந்துள்ள புதிய பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கக்கூடிய கட்சிக்கு தனது ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகரும் முன்னாள் அதிபருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

இதற்காக வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசிய கட்சிக்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே தேர்தல் உடன்படிக்கை ஒப்பந்தம் கொழும்பில் உள்ள தாஜ்சமுத்திரா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.

எஸ். முஹம்மது ராஃபி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in