

கொரிய தீபகற்பபிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே கிழக்கு கடல் பகுதியில் இரண்டு ஏவுகணை சோதனைகளை வடகொரியா வியாழக்கிழமை பரிசோதித்தது.
இதனை ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் உறுதிப்படுத்தின. இதனைத் தொடர்ந்து தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வெள்ளிக்கிழமை கூறும்போது, “ வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனையை தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வந்ததது.
இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் கநடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் அமெரிக்கா - வடகொரியா இடையே அணுஆயுதச் சோதனை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வரு நிலையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.