Published : 29 Oct 2019 06:26 PM
Last Updated : 29 Oct 2019 06:26 PM

சிரியாவின் எல்லையிலிருந்து குர்துப் படைகள் வெளியேற வேண்டும்: துருக்கி

குர்து படையினர் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து முழுமையாக வெளியேறவில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துருக்கி பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் கூறும்போது, “குர்துப் படைகள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து முழுமையாக வெளியேறவில்லை. அவர்கள் டால் அப்யாத் நகரில் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் வெளியேற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே துருக்கி - சிரிய எல்லைக்கு தெற்கே 30 கி.மீ நிலப்பரப்பில் இருந்து சிரிய குர்து படைகளையும், அவர்களது படைகளையும் அகற்றுவோம் என்ற ஒப்பந்தம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்ற நிலையில் சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

சிரியா மீதான தாக்குதல் காரணமாக உலக நாடுகள் துருக்கி மீது விமர்சனங்கள் எழுப்ப துருக்கி மற்றும் குர்துப் படை இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியிலிருந்து குர்து படையினர் வெளியேற வேண்டும் என்று துருக்கி வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x