ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டார்: குர்து படையினர்

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டார்: குர்து படையினர்
Updated on
1 min read


சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டதாக குர்து படையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குர்து படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “சிரியாவில் அய்ன் அல்-பைய்டா கிராமத்தில் குர்து ஜன நாயக படையினர் மற்றும் அமெரிக்க படையினர் ஐஎஸ் அமைப்புக்கு எதிராக நடத்திய தாக்குதலில் ஐஎஸ் படையின் செய்தி தொடர்பாளர் அபு ஹசப் அல் முஹாஜிர் கொல்லப்பட்டார். இவர் ஐஏஸ் அமைப்புக்கு வலது கரமாக செயல்பட்டு வந்தவர்” என்று தெரிவித்தனர்.

சிரியாவில் வடக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி இறந்த செய்தியை அறிவித்த சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பை குர்து படையினர் வெளியிட்டனர்.

மேலும், சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிப்பில் உள்ள பாரிஷா கிராமத்தின் புறநகரில், ஹெலிகாப்டர்கள் ஐஎஸ் தீவிரவாதக் குழுக்களோடு தொடர்புடைய குழு தீவிரவாதிகள் தங்கியிருந்த ஒரு வீடு மற்றும் காரை குறிவைத்து ஐஎஸ் மற்றும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

முன்னதாக துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா தனது படைகளை அப்பகுதியிலிருந்து வாபஸ் பெற்ற நிலையில் சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

சிரியாவில் ஐஎஸ்ஸிடமிருந்து மீட்கப்பட்ட பகுதிகளை மீண்டும் அவர்கள் கைப்பற்ற அமெரிக்கா அனுமதிக்காது என்று ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் சிரியாவுக்கு படைகளை அனுப்பியது அமெரிக்கா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in