இராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 30 பேர் பலி
இராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 30 பேர் பலியாகினர்.
இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இராக் பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக, மூன்று வாரங்களுக்கு மேலாக போராட்டக்காரர்கள் பெரும் திரளாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வன்முறை காரணமாக பிரதமர் அதில் அப்துல் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இராக் தலைநகர் பாக்தாத், பஸ்ரா, மாய்சன் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர். 2,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இதனை இராக் மனித உரிமை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இராக்கில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவருமாறு ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்தது. இந்த நிலையில் அங்கு தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
