

லண்டனில் 39 பேரின் உடல்கள் லாரியில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் 4-வது நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் லாரி ஒன்றில் மர்மமான முறையில் 39 பேரின் உடல்கள் ( 31 பேர் ஆண்கள். 8 பேர் பெண்கள்) கன்டெய்னரில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
39 பேரும் பல்கேரியாவிலிருந்து வேல்ஸ் வழியாக படகில் வந்தவர்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் அவர்கள் எப்படி கொல்லப்பட்டனர், கொல்லப்பட்டு எப்படி கன்டெய்னரில் அடைக்கப்பட்டனர் என்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த லாரியை ஓட்டி வந்த 25 வயதான வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த மோரிஸ் ராபின்சன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்டவர்கள் சீன நாட்டவர்கள் என்று பிரிட்டன் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டன. ஆனால் 39 பேரும் சீனாவைச் சேர்ந்தவர்களா என்று உறுதிப்படுத்த முடியவில்லை என்று சீனத் தூதரகம் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 4-வது நபர் சந்தேகத்தின் பேரில் லண்டனின் ஸ்டேன்ஸ்டட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர் குறித்த விவரம் ஏதும் வெளியாகவில்லை.