Published : 23 Oct 2019 11:54 AM
Last Updated : 23 Oct 2019 11:54 AM

குர்து படைகள் எல்லையிலிருந்து வெளியேற்றப்படும்: புதின், எர்டோகன் ஒப்பந்தம்

துருக்கியும் ரஷ்யாவும் இணைந்து குர்து படை வீரர்களை துருக்கி - சிரிய எல்லையிலிருந்து வெளியேற்றும் என்று புதினும், எர்டோகனும் பேச்சுவார்த்தையின் முடிவில் தெரிவித்துள்ளனர்.

5 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் சிரியாவின் வடக்குப் பகுதியில் நிலைமையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது தொடர்பாக எர்டோகனும், புதினும் சோச்சி நகரில் உள்ள பிளாக் ஸி விடுதியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருவருக்கும் இடையே சுமார் 7 மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அல் ஜசிரா செய்தி வெளியிட்டுள்ளது.

அல் ஜசிரா வெளியிட்ட செய்தியில், “துருக்கி - சிரிய எல்லைப் பகுதியில் குர்து படைகள் முழுவதுமாக வெளியேற்றப்படும் என்று ரஷ்ய அதிபர் புதினும், துருக்கி அதிபர் எர்டோகன் பேச்சுவார்த்தையி முடிவில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின், சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்திடம் பேசியுள்ளதாகவும், சிரிய எல்லையில் ரஷ்யப் படைகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் ஆசாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு துருக்கி சம்மதம் தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x