Published : 21 Oct 2019 05:34 PM
Last Updated : 21 Oct 2019 05:34 PM
சிரியாவிலிருந்து 200 அமெரிக்க வீரர்களை வெளியேற்ற அதிபர் ட்ரம்ப் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறும்போது, ''ஐஎஸ் தீவிராவாதிகளுக்கு எதிராக சண்டையிடுவதற்காக உள்ள அமெரிக்கப் படையில் 200 பேரை வெளியேற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் குர்து படைகளை அனுமதிக்கவும் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் மூன்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துருக்கி - குர்து படைகள் மோதல்
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT