Published : 21 Oct 2019 11:36 AM
Last Updated : 21 Oct 2019 11:36 AM

சிரியாவில் போர் நிறுத்தம்: கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய குர்து வீரர்கள்

சிரிய - துருக்கி எல்லையில் அமைந்துள்ள ரஸ் அல் ஐன் நகரில் போர் நிறுத்தம் காரணமாக குர்து படைகள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சிரிய ஜனநாயகப் படைகள் வெளியிட்ட அறிக்கையில், ''போர் நிறுத்தம் காரணமாக குர்து படைகள் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியான ரஸ் அல் ஐன் பகுதியிலிருந்து வெளியேறின'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வியாழக்கிழமை சிரியாவின் வடக்குப் பகுதியில் தாக்குதல் நடத்திய துருக்கி, உலக நாடுகளின் கண்டனத்தைத் தொடர்ந்து குர்து படைகளுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. ஆனால், இரு தரப்பிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், குர்து படைகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் சிரியாவின் வடக்குப் பகுதியில் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளப்படும் என்று துருக்கி கூறியது. இதனையடுத்து குர்து படைகள் தங்கள் பகுதியிலிருந்து முழுமையாக வெளியேறின.

இதனைத் தொடர்ந்து சிரிய - துருக்கி எல்லையில் முழுமையான போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x