

தலிபான்களுக்காக குண்டுவெடிப்பு போன்ற தாக்குதலை நடத்தும் ஷலாவுதீன் என்ற முக்கிய நபர் கொல்லப்பட்டதாக ஆப்கன் படைகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஆப்கன் பாதுகாப்புப் படை, “ஆப்கனில் தாகர் மாகாணத்தில் தலிபான்களுக்கு எதிராக நடத்திய தாக்குதலில், தலிபான்களுக்கு குண்டுவெடிப்பு உள்ளிட்ட தாக்குதலை நடத்துவதில் உதவிய முக்கிய நபரான ஷலாவுதீன் என்பவர் கொல்லப்பட்டார். 7 தலிபான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் வார்டார்க் மற்றும் பக்திகா மாகாணங்களில் ஆப்கன் ராணுவம், தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலில் 7 தலிபான் தீவிரவாதிகள் பலியாகினர். 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தலிபான்களுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
தலிபான்களுடன் பேச்சுவார்த்தை
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக 9 சுற்றுகள் அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை இறந்து விட்டதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் ஆப்கனில் அமைதி ஏற்பட, தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.