Published : 17 Oct 2019 05:23 PM
Last Updated : 17 Oct 2019 05:23 PM

எங்களுக்கு வரும் நதி நீரை இந்தியா திசைமாற்றினால் அது ஆக்கிரமிப்பு செயலே: பிரதமர் மோடி பேச்சுக்கு பாக். கண்டனம்

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் முகமது பைசல்: படம் உதவி ட்விட்டர்

இஸ்லாமாபாத்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் மீது எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கிறது. இந்தியா அதைத் தடுத்தாலோ அல்லது திசை மாற்ற முயற்சித்தாலோ அது ஆக்கிரமிப்பு செயல்தான் என்று பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹரியாணாவில் பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், "பாகிஸ்தானுக்குச் செல்லும் நதி நீரைத் தடுப்போம்" என்று கூறியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது.

ஹரியாணாவில் உள்ள சார்கி தாத்ரி எனும் இடத்தில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது மோடி பேசும்போது, ''கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவுக்குச் சொந்தமான நீர், ஹரியாணா விவசாயிகளுக்குச் சொந்தமான நீர் பாகிஸ்தான் பக்கம் பாய்கிறது. இந்த நீரை மோடியாகிய நான் தடுத்து நிறுத்தி, உங்களுடைய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் கொண்டுவருவேன்.

பாகிஸ்தான் பக்கம் பாயும் நீரைப் பெறுவதற்கு ஹரியாணா, ராஜஸ்தான் மாநில மக்களுக்கு அதிக உரிமை இருக்கிறது. இந்த நீரை இதற்கு முன் ஆண்ட அரசுகள் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இனிமேல் உங்கள் போராட்டத்தில் உங்களுக்காக மோடியாகிய நான் போரிடுவேன்’’ என்றார்.

இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் நதி நீரைத் தடுப்போம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளது குறித்துக் கேட்டனர்.

அதற்கு முகமது பைசல் கூறுகையில், "சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி மேற்கு நோக்கிப் பாயும் மூன்று நதிகள் மீது எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கிறது. அந்த நதி நீரை திசை மாற்றவோ அல்லது தடுக்கவோ இந்தியா முயன்றால் அது ஆக்கிரமிப்பாகவே கருதப்படும். அதற்குப் பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x