Published : 17 Oct 2019 05:09 PM
Last Updated : 17 Oct 2019 05:09 PM

துருக்கிக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய மாட்டோம்: ஜெர்மனி 

துருக்கிக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெர்மனி நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் கூறும்போது, “நான் கடந்த சில தினங்களாக சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகிறேன். அதனையே மீண்டும் கூறுகிறேன். எனவே இந்தச் சூழலில் துருக்கிக்கு ஜெர்மனி ஆயுதங்களை விநியோகிக்காது” என்று தெரிவித்தார்.

முன்னதாக, நார்வே மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் துருக்கிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ததை நிறுத்திவிட்டன. இந்நிலையில் ஜெர்மனி இந்த முடிவை எடுத்துள்ளது.

பின்னணி:

துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த வாரம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வடக்கு சிரியாவில் தனது படைகளை வாபஸ் பெற்றது அமெரிக்கா. சிரியாவில் துருக்கிப் படையினரும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குழந்தைகள்.

சிரியாவின் குர்து படைகள் மீதான தாக்குதலை துருக்கி நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x