Published : 16 Oct 2019 04:23 PM
Last Updated : 16 Oct 2019 04:23 PM

ஹாங்காங்கில் 4 மாதங்களில் 2,200 பேர் கைது: கேரி லேம்

ஹாங்காங்கில் போராட்டம் தொடங்கியது முதல் சுமார் 2,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைவர் கேரி லேம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹாங்காங் தலைவர் கேரி லேம் கூறுகையில், “ ஹாங்காங்கில் கடந்த 4 மாதங்களாக நகரம் முழுவதும் சுமார் 400 போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. போராட்டங்கள் காரணமாக 1,100 பேர் காயம் அடைந்துள்ளனர். 2,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹாங்காங்கில் கலகக்காரர்கள் குழப்பத்தையும், அச்சத்தையும் பரப்பி ஹாங்காங் மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைக்கின்றனர். ஹாங்காங் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புமா என்று மக்கள் கேட்கிறார்கள்? ஹாங்காங் இன்னும் மக்கள் அமைதியாக வாழ்வதற்கான இடமாக இருக்கிறதா?" என்று பேசினார்.

தொடர்ந்து ஹாங்காங்கில் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக ஹாங்காங்கில் பொருளாதாரம், சுற்றுலா மோசமடைந்து வருவதாக கேரி லேம் முன்னரே வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஹாங்காங் போராட்டப் பின்னணி

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹாங்காங். சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இந்நிலையில், ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவை கடந்த ஜூன் மாதம் ஹாங்காங் கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கைதும் செய்யப்பட்டனர்.

இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த மசோதாவைத் திரும்பப் பெறுவதாக ஹாங்காங் அரசு அறிவித்தது.

எனினும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஹாங்காங் போராட்டக்காரர்கள் அவர்களது பிற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x