Published : 15 Oct 2019 04:14 PM
Last Updated : 15 Oct 2019 04:14 PM
தோஹா
சிரியாவில் குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் துருக்கிக்கு எதிராக பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கத்தார் ஆதரவு தெரிவித்துள்ளது.
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் துருக்கியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டின் மீது தடை விதித்து அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது பின் அப்துல் ரஹ்மான் கூறியதாவது:
‘‘சிரியாவில் குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவை துருக்கிக்கு உள்ளது. அந்நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் துருக்கிக்கு உண்டு. எல்லையையொட்டி 30 கிலோ மீட்டர் வரை பாதுகாப்பு மண்டலமாக பாதுகாக்க வேண்டிய சூழல் துருக்கிக்கு உள்ளது.
சிரியா அகதிகள் உள்ளே நுழைந்து விடாமலும், குர்து போராளி குழுக்கள் தாக்குதல் நடத்தி விடாமலும் தடுப்பதற்காகவே துருக்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.’’ எனக் கூறினார்.
கத்தாருக்கு எதிராக சவுதி உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுத்தபோது, அந்நாட்டுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT