Published : 11 Oct 2019 05:34 PM
Last Updated : 11 Oct 2019 05:34 PM
ஈரான் - சவுதி இடையே மத்தியஸ்தம் செய்வதற்காக நாளை (சனிக்கிழமை) அந்நாடுகளுக்கு புறப்படுகிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள், “மத்திய கிழக்கு நாடுகளுக்கு சனிக்கிழமையன்று பிரதமர் இம்ரான் கான் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தில் இம்ரான் கான், ஈரான் - சவுதி இடையே நாடுகளுக்கு இடையே பதற்றத்தை குறைக்க மத்தியஸ்ததில் ஈடுபட உள்ளார். இதனையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியை சந்திக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து சவுதிக்கு செல்கிறார் இம்ரான் கான்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
சவுதி - ஈரான் இடையே நிலவும் மோதலை தவிர்க்க பாகிஸ்தான் உட்பட சில நாடுகள் ஈரான் - சவுதி இடையே பதற்றத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் - சவுதி இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க தன்னை பேச்சுவார்த்தையில் ஈடுபட கூறியதாக இம்ரான் கான் முன்னரே கூறி இருந்தார். இந்த நிலையில் நாளை பயணம் மேற்கொள்கிறார்.
ஈரான் - சவுதி மோதல்
முன்னதாக, சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். ஆனால் இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதனை ஈரான் மறுத்து வருகிறது.
இதன் காரணமாக வளைகுடா பகுதியில் போர் ஏற்படும் சூழல் உருவானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT