

ஈரான் தனது சொந்தத் தேவைகளுக்காக ஏமனைச் சுரண்டுகிறது என்று சவுதி குற்றம் சாட்டியுள்ளது.
சவுதி எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வளைகுடா பகுதியில் ஈரானுக்கும் சவுதிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.
இதுகுறித்து சவுதி இளவரசர் கலித் பின் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஈரான் தனது சுய தேவைகளுக்காக ஏமனைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஒருபக்கத்தில் தீவிரவாதச் செயல்களுக்காக ஏமனைத் தொடர்ந்து சாடுகிறது.
சவுதி எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதற்கு ஏமன் வெளியுறவுத் துறை அமைச்சர் கோழைத்தனமாக ஏமனைச் சாடுகிறார். ஈரானின் செயல்களுக்கு எதிராக ஏமன் அரசும் அந்நாட்டு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணம் இது. அவர்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனால் இந்தத் தாக்குதல் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
அமெரிக்கா மட்டுமில்லாது பிரான்ஸ், சவுதி, இங்கிலாந்து ஜெர்மனி போன்ற நாடுகளும் இந்தத் தாக்குதல் பின்னணியில் ஈரான்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளன. ஆனால், இதனை ஈரான் மறுத்துள்ளது. இதன் காரணமாக வளைகுடா பகுதியில் ஈரானுக்கும், சவுதிக்கும் மோதல் ஏற்படலாம் என்ற பதற்றம் நிலவுகிறது.