Published : 03 Oct 2019 04:33 PM
Last Updated : 03 Oct 2019 04:33 PM
தன் சொந்த அண்ணனை சுட்டுக் கொன்ற முன்னாள் போலீஸ் அதிகாரியை ஆரத்தழுவி ஆறுதல் சொன்ன தம்பியின் செயல் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் கறுப்பின இளைஞரான போதம் ஜான். கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், முன்னாள் போலீஸ் அதிகாரியான ஆம்பெர் கைகர் என்பவர், அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்து போதம் ஜானை சுட்டுக் கொன்றார். விசாரணையின் போது, போதம் ஜானின் அறையை தன்னுடைய அறையெனக் கருதி, தன் வீட்டுக்குள் யாரோ நுழைந்துவிட்டதாக எண்ணி சுட்டு விட்டதாக ஆம்பெர் கைகர் தெரிவித்திருந்தார்.
கறுப்பினத்தவர் ஒருவரை முன்னாள் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொன்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணை முடிவடைந்த நிலையில், இந்தக் கொலை வழக்கில் ஆம்பெர் கைகருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதையடுத்து, இந்தத் தண்டனை போதாது என, நீதிமன்ற அறைக்கு வெளியே இருந்த மக்கள் கோபத்தில் முழக்கமிட்டனர்.
ஆனால், நீதிமன்ற அறைக்குள் அமர்ந்திருந்த கொலையான போதம் ஜானின் தம்பி பிராண்ட் ஜான், அங்கிருந்த குற்றவாளி ஆம்பெர் கைகரை நோக்கிப் பேசினார். அப்போது அவரை தான் மன்னித்து விட்டதாகக் கூறினார்.
" ஒரு மனிதராக நான் உங்களை நேசிக்கிறேன். உங்களுக்கு எந்தக் கெடுதலும் நேர வேண்டும் என நான் விரும்பவில்லை," எனத் தெரிவித்தார். பிறகு, அங்கிருந்த நீதிபதியை நோக்கி, " இது சாத்தியமா எனத் தெரியவில்லை. நான் அவரை அரவணைக்கலாமா?" என அனுமதி கேட்டார்.
நீதிபதி அனுமதித்ததையடுத்து, பிராண்ட், ஆம்பெரை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். அப்போது, ஆம்பெர் மனமுடைந்து அழுதார்.
தன் அண்ணனைக் கொன்றவரை மன்னித்து அன்பு செலுத்திய பிராண்ட் ஜானை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT