

பெருவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 23 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஊடகங்கள், ''பெருவின் தென்பகுதியில் குஸ்பிகன்ஜி மாகாணத்தில் உள்ள கஸ்கோ பகுதியில் பயணிகள் 40 பேருடன் சென்ற பேருந்து ஒன்று 100 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 23 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்'' என்று தெரிவித்துள்ளன.
இந்த விபத்து குறித்து மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒருவர் கூறும்போது, “மழை பெய்ததால் மீட்புப் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக காயமடைந்தவர்களை வெளியே கொண்டுவர சிரமம் ஏற்பட்டது” என்றார்.
கஸ்கோ பகுதி பெருவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகும். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில் பெரு தலைநகரான லிமாவுக்கு வெளியே ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியாகினர். பெருவில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் 3,250 பேர் பலியாகினர். 2017 ஆம் ஏற்பட்ட சாலை விபத்தில் 2,830 பேர் பலியாகினர். பெருவில் கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.