Published : 03 Oct 2019 10:48 AM
Last Updated : 03 Oct 2019 10:48 AM
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை உறுதி செய்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
அணு ஆயுத சோதனை அழிப்பு தொடர்பாக அமெரிக்கா - வடகொரியா இடையே அக்டோபர் 5 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக வடகொரியா தெரிவித்தது.
இதற்கு அமெரிக்கா தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்த நிலையில் மீண்டும் ஏவுகணையை சோதனை அந்நாடு நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் புதன்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை குறித்து வடகொரியா கூறும்போது, “புக்குக்சாங் -3 ஏவுகணை சோதனை அயல்நாட்டு சக்திகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதில் வடகொரியாவுக்கு புதிய முன்னேற்றத்தை அளித்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனை காரணமாக அண்டை நாடுகளின் பாதுகாப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.
ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
கடந்த பிப்ரவரியில், வியட்நாமிய தலைநகரான ஹனோய் நகரில் ட்ரம்ப் மற்றும் கிம் ஆகியோருக்கிடையே நடைபெற்ற இரண்டாவது சந்திப்பின்போது அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT