

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த மே 19-ம் தேதி ரசாயனத் தாக்குதலை அதிபர் ஆசாத் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடைசிப் பகுதியான இட்லிப்பில் கடந்த மே 19-ம் தேதியன்று சிரிய அதிபர் ஆசாத் ரசாயனத் தாக்குதலை நடத்தினார். சிரியாவில் நடக்கும் போர் குற்றங்களுக்கு ஆசாத் பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2017, 2018-ம் ஆண்டுகளிலும் சிரிய அதிபர் பொதுமக்கள் மீது ரசாயனத் தாக்குதலை நடத்தினார் என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியது. இதுகுறித்து சிரியா தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை, வளர்ந்த நாடுகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில். துருக்கிக்கும், சிரியாவுக்கும் இடையே சில நாட்களாக மோதல் வலுத்து வருகிறது.