Last Updated : 09 Jul, 2015 10:16 AM

 

Published : 09 Jul 2015 10:16 AM
Last Updated : 09 Jul 2015 10:16 AM

ஓய்வூதிய பணத்தை எடுக்க முடியாததால் வங்கிக்கு வெளியே அழுதவருக்கு உதவ கிரீஸ் புறப்பட்ட ஆஸ்திரேலிய நண்பர்

கிரீஸ் நாட்டில் நிதி நெருக்கடி காரணமாக, அரசு எடுத்த நடவடிக்கையால் தனது ஓய்வூதிய பணத்தை எடுக்க முடியாததால் ஒருவர் வங்கிக்கு வெளியே அழுது புரண்டார். இதைப் பத்திரிகையில் பார்த்த அவரது குடும்ப நண்பர் ஒருவர் ஆஸ்திரேலியாவிலிருந்து கிரீஸுக்கு புறப்பட்டுள்ளார்.

கிரீஸ் நாடு ஐரோப்பிய யூனியனிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில், வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு கிரீஸ் அரசு கடந்த வாரம் கட்டுப்பாடு விதித்தது.

தெசலாநிகி நகரைச் சேர்ந்த கியார்கஸ் சட்சிபோடியாடிஸ் (77), தனது மனைவியின் ஓய்வூதியத் தொகையை கடந்த வாரம் எடுக்க வங்கிக்குச் சென்றார்.

ஆனால் 4 வங்கிகளில் முயற்சி செய்தபோதும் அவரால் 132 அமெரிக்க டாலரை எடுக்க முடியவில்லை.

இதனால் மனம் உடைந்த அவர் வங்கிக்கு வெளியே அமர்ந்தபடி அழுதார். இந்தப் படம் பல்வேறு ஊடகங்களில் வெளியானது.

ஆஸ்திரேலியாவின் ஒரு நிதி நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றும் ஜேம்ஸ் கவுபோஸ், சிட்னியில் வெளியாகும் ஒரு பத்திரிகையில் இந்தப் படத்தை பார்த்தார்.

படத்தில் இருப்பவர் தனது தந்தையின் நண்பர் போல் இருப்பதை அறிந்த அவர், கிரீஸில் வசிக்கும் தனது தாயாரிடம் பேஸ்புக் மூலமாக விசாரித்ததில் அது உண்மை என தெரியவந்தது.

பின்னர் தனது தாயாரின் ஆலோசனையின் பேரில், சட்சி போடியாடிஸுக்கு உதவுவதற்காக ரொக்கத்துடன் கிரீஸ் புறப்பட்டார் கவுபோஸ். மேலும் சட்சிபோடியா டிஸை எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டறிய உதவும்படி பேஸ்புக்கில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதவிர சட்சிபோடியாடி ஸுக்கு உதவுவதற்காக அறக்கட் டளை ஒன்றை அமைத்து அதற்கு மற்றவர்கள் நிதி உதவி செய்யலாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏராளமான கிரீஸ் நாட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி உள்ளனர். மெல்போர்ன் நகரில் மட்டும் ஏராளமான கிரேக்கர்கள் உள்ளனர். கவுபோஸின் குடும்பமும் தெசலாநிகி நகரை பூர்விகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x