Published : 23 Sep 2019 05:46 PM
Last Updated : 23 Sep 2019 05:46 PM
ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “ஏமனில் ஒம்ரான் மாகாணத்தில் சவுதி கூட்டுப் படைகள் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் அதே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் மாயமாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரியவந்தது.
இந்தத் தாக்குதல் குறித்து சவுதி தரப்பில் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போருக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் சவுதியின் ஏண்ணெய் ஆலையை ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஏமனில் தாக்குதலை சவுதி தீவிரப்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT