

கென்யா தலைநகர் நைரோபியில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலியாகினர். 57 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து கென்ய அரசின் செய்தித் தொடர்பாளர் சைரஸ் கூறும்போது, “கென்ய தலைநகர் நைரோபியில் பள்ளிக்கூடம் ஒன்றின் முதல் தளத்தில் ஏற்பட்ட விரிசலில் கட்டிடம் சரிந்தது. இதில் மாணவர்கள் அனைவரும் கட்டிடத்தில் சிக்கிக் கொண்டனர். இதில் 7 மாணவர்கள் பலியாகினர். 57 மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிட விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக் கூட விபத்து கென்ய தலைநகரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் பலியான மாணவர்களுக்கு கென்ய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
கென்ய தலைநகர் நைரோபியில் அனுமதி பெறாமல் சுமார் 40,000 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவை இடிந்து விழும் ஆபத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.