

ஹூஸ்டன்
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு பிரதமர் மோடி வந்துள்ளதைக் கவுரவப்படுத்தும் வகையில் நகரின் மேயர் சில்வெஸ்டர் டர்னர், நகரின் நுழைவு வாயில் சாவியை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்து பெருமைப்படுத்தினார்.
டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் சார்பில் ஹவுடி மோடி நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்கபதற்காகவும், ஐ.நா.வில் உரையாற்றவும் 7 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.
ஹூஸ்டன் நகரில் உள்ள என்ஆர்ஜி அரங்கில் நேற்று நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் பங்கேற்றார். இருவரும் ஒரே மேடையில் தோன்றி மக்களிடம் உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியைக் காண ஏறக்குறைய 50 ஆயிரம் இந்தியர்கள் வந்திருந்தனர்.
அப்போது பிரதமர் மோடி அரங்கிற்கு வந்தவுடன் அவரை வரவேற்று ஹூஸ்டன் நகர மேயர் சில்வெஸ்டர் டர்னர் பேசினார். அப்போது டர்னர் பேசுகையில், "அமெரிக்காவில் பன்முகக் கலாச்சாரங்கள், மக்கள் நிறைந்த நகரம் ஹூஸ்டன். இப்போது ஹவுடி மோடி நிகழ்ச்சி நடப்பதன் மூலம் 140 மொழிகளில் நாம் நலமா என்று பேசுகிறோம்" எனத் தெரிவித்தார்.
அதன்பின் ஹூஸ்டன் நகரின் நுழைவாயில் கதவின் சாவிகளை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்து அவரைக் கவுரவப்படுத்தினார்.
அமெரிக்காவில் சில குறிப்பிட்ட பிரபலங்களையும், தலைவர்களையும் கவுரவிக்க விரும்பும் நகரங்கள் தங்கள் நுழைவாயிலின் சாவியை அவர்களிடம் வழங்குவது என்ற மரபைப் பின்பற்றுவது வழக்கம்.
'மோடி நலமா?' நிகழ்ச்சியில் 24 மாகாண ஆளுநர்களும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
பிடிஐ